மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (35), தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. கடந்த ஆகஸ்டு மாதம் குடிபோதையில் வீட்டிக்கு வந்த கோவிந்தராஜ், வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது 8 வயது மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி இதுபற்றி பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதைத்தொடர்ந்து கோவிந்தராஜை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்சோ) காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கோவிந்தராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று தொழிலாளி கோவிந்தராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் விவேகானந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து பென்னாகரம் காவல்துறையினர், கோவிந்தராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதற்கான உத்தரவு நகலை ஏற்கனவே சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோவிந்தராஜிடம் பென்னாகரம் காவலர்கள் வழங்கினார்கள்.
