drinking water open from veeranam lake to chennai
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது வீராணம் ஏரி. இதன் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் வீராணம் ஏரியில் இருந்து தலைநகரான சென்னைக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு விநாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் இருந்தும் செங்கால் ஓடை மூலமும் ஏரிக்கு நீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.5 அடி. இந்நிலையில் இதன் நீர்மட்டம் 45 அடியை எட்டியது. தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து உள்ளதால் சென்னை குடிநீருக்காக இன்று முத்ல் 60 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த நீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளாக வீராணம் ஏரி வறண்டிருந்த நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்கு பின் ஏரியில் இருந்து சென்னைக்கு நீர்திறக்கப்பட்டு உள்ளது.
