உணவுப்பொருளின் தரத்தில் சந்தேகமா? வாட்ஸ்-அப்க்கு ஒரு மெஸஜ் தட்டிவிடுங்க; உடனே ஆக்ஷ்ன் எடுப்பாங்க…
மதுரை
மக்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் அதிகபட்ச விலையை விட அதிகமாக விற்றாலோ, உணவுப் பொருளின் தரம் குறித்து சந்தேகம் எழுந்தாலோ வாட்ஸ்–அப் எண்ணில் புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் வீரராகவராவ் கூறினார்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருக்கும் கடைகளை ஆட்சியர் வீரராகவராவ் ஆய்வு நடத்தினர்.
அப்போது, அவர் உணவுப் பொருட்களின் அதிகபட்ச விற்பனை விலை, காலாவதி தேதி ஆகியவைக் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
“மதுரை மாவட்டத்தில் 27 ஆயிரத்து 357 சில்லரை உணவுப் பொருட்கள் விற்பனைக் கடைகள் இருக்கின்றன.
உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டுள்ள உணவு தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி மற்றும் அதன் விலை குறித்த ஆய்வு நடத்த உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைச் சார்பில் பத்து குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்தக் குழுவினர் பால், எண்ணெய், தண்ணீர், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்வர். அப்போது, அவர்கள் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து, அதன் தரம் குறித்துச் சோதனைக் கூடங்களுக்கு அனுப்பிவைத்து பரிசோதனை செய்வர்.
இதன் இறுதியில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனைச் செய்வது தெரியவந்தால் தொடர்புடைய விற்பனையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அபராதமும் விதிக்கப்படும். சிறை தண்டனை கூட விதிக்கப்படும்.
மேலும், மக்கள் பொருட்களை வாங்கும்போது அதிகபட்ச விலையை விட அதிகமாக இருந்தாலும், தரம் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலும் 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தரலாம். அப்படி வரும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.
ஆட்சியரின் இந்த ஆய்வின்போது, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் இலட்சுமிநாராயணன் உள்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.