தூர்தர்ஷன் பொதிகை ஒளிபரப்பு பிப்ரவரி 12 முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது - துணை இயக்குநர் அறிவிப்பு...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தூர்தர்ஷன் பொதிகை ஒளிபரப்பு வரும் 12 முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது என்று தூர்தர்ஷன் பராமரிப்பு மையத்தின் துணை இயக்குநர் எஸ்.சின்னச்சாமி அறிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் என்பது இந்தியாவின் பொதுத் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர் என்பதோடு இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பொது ஒளிபரப்பு சேவை நிறுவனமான பிரச்சார் பாரதியின் ஒரு பிரிவாகும்.
பதிவகம் (studio) மற்றும் அலைபரப்பிகள் (transmitters) ஆகிய உள்கட்டுமான வகையில் இது உலகிலுள்ள மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும்.
2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தூர்தர்ஷன் தன்னுடைய 50 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தகக்து.
சமீபத்தில் இது எண்ணிம நிலப்பரப்பு அலைபரப்பிகள் (Digital Terrestrial Transmitters) வழி ஒளிபரப்பை தொடங்கியிருக்கிறது.
பொதிகை தொலைக்காட்சி அல்லது டிடி 5 தூர்தர்சன் வழங்கும் அலைவரிசைகளில் முதன்மையானதும் இந்தியாவில் தரைவழி தொலைக்காட்சிகளில் மிக பரவலாக கிடைக்கின்ற ஓர் அலைவரிசை.
காலை வணக்கம், நெடுந்தொடர்கள், அரட்டை மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சிகள், செய்திகள், செவ்வியல் இசை நிகழ்ச்சிகள் என பலவகைப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகிறது. அரசுத்துறை நிறுவனமாதலால் அரசின் கொள்கைகளுக்கேற்ப சமூக நலம் பயக்கும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
இந்த நிலையில், வேலூரில் உள்ள தூர்தர்ஷன் பராமரிப்பு மையத்தின் துணை இயக்குநர் எஸ்.சின்னச்சாமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அந்த செய்திக்குறிப்பில், “பிரசார் பாரதி வாரியத்தின் முடிவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சேனல் எண் 11 (+), அலைவரிசை 217.26 எம்எச்இசட்-இல் இயங்கி வரும் தூர்தர்ஷன் பொதிகை ஒளிபரப்பு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் நிரந்தரமாக நிறுத்தப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.