இனி மாலை 6 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டாம் - எச்சரிக்கை விடுக்கும் வனத்துறை...
சேலம்
தமிழக, கர்நாடக மாநிலங்களின் எல்லையில் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் மக்கள் யாரும் நடமாட வேண்டாம் எம்ன்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக, கர்நாடக எல்லையான பாலாறு பகுதியில் அடர்ந்த வனப் பகுதி உள்ளது. இங்கு யானைகள், மான்கள் மற்றும் பிற விலங்குகள் ஏராளமாக உள்ளன.
இந்த வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனப்பகுதியில் நீர் நிலைகள் இருந்தன. கடும் வறட்சி காரணமாக இந்த நீர் நிலைகள் வறண்டு விட்டதால் வனப்பகுதியில் உள்ள யானைகள் தண்ணீர் தேடி காவிரி மற்றும் பாலாறு பகுதிக்கு வந்து செல்கின்றன.
இங்கும் தண்ணீர் போதுமானதாக இல்லாததால், தண்ணீரைத் தேடி யானைகள் கிராமங்களை நோக்கி வருகின்றன. கடந்த வாரம் நீதிபுரத்தில் புகுந்த யானைகள் விவசாய நிலங்களைச் சேதப்படுத்திவிட்டுச் சென்றன.
யானைகள் குடியிருப்புகளுக்கு அருகில் வருவதால், இரவு நேரங்களில் மலை கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை.
பாலாறு வழியாக கோபிந்தம், சம்புருட்டு, ஒகேனக்கல் செல்லும் சாலையைக் கடந்து யானைகள் காவிரி ஆற்றுக்கு வருகின்றன. சில நேரங்களில் வாகன ஓட்டிகளை யானைகள் விரட்டி உள்ளதால் மாலை 6 மணிக்கு மேல் இந்தச் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.