ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்கள்; பலத்த காயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை...
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதில் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் இராமதீர்த்தம் வடக்கு, தெற்கு, மேட்டுத்தெரு, எம்.கே.நகர், முருங்கைவாடி, வேர்க்கோடு, கடற்கரை, தம்பியான்கொல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
இவற்றில் பெரும்பாலும் வெறி நாய்களாக இருப்பதால் சாலையில் நடந்துச் செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்திச்சென்று கடிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் இராமேசுவரம் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோரை வெறிநாய்கள் கடித்து குதறியுள்ளன.
இதில் இராமேசுவரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்த நம்புத்தாய் (55), எம்.கே.நகரைச் சேர்ந்த மாரியம்மாள் (60), தம்பியான்கொல்லை பகுதியைச் சேர்ந்த காளசுவரி (35), பாலமுருகன் (12), முருங்கைவாடி பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி (65), காட்டுப்பிள்ளையார்கோவில் ராஜலட்சுமி(35), ராமதீர்ததம் தெற்கு ஜாபர் (39) உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து நேற்று இராமேசுவரம் அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கு முதலுதவி சிகிச்சைப் பெற்றனர்.
இவர்களுக்கு நாய்க் கடிக்கான ஊசி போடப்பட்டதுடன் வெறி நாய்க்கடிக்கான ஊசியை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் போட்டுக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இராமேசுவரத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அடியார்களை நாய்கள் கடித்துள்ளன.
இராமேசுவரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தெருநாய், வெறிநாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இவற்றை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.