Doctors struggle to release the doctors arrested in Chennai

அரியலூர்

மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியபோது கைது செய்யப்பட்ட மருத்துவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அரியலூரில் மருத்துவ பணிகள் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

அரியலூர் வாலாஜா நகரிலுள்ள மருத்துவ பணிகள் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில், “முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் உயர் பட்டமேற்படிப்பு ஆகிய படிப்புகளுக்கு அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் ஏற்கெனவே இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும். அப்படி வழங்குவதால் மட்டுமே அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும், ஏழை மக்களின் சுகாதாரத்தையும் உறுதி செய்ய முடியும்.

2018-19-ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மருத்துவப் பட்டப்படிப்பிற்கான தேர்வை தமிழக அரசே நடத்த வேண்டும்”

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விதிவிலக்கு அளிக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தற்போதும் நடத்தி வருகின்றனர்.

இதில், சென்னை ஓமாந்தூரர் பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வின் போது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை காவலாளர்கள் கைது செய்தனர்.

இதனைக் கண்டித்தும், கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் அரியலூரில் மருத்துவப் பணிகள் துறை துணை இயக்குநர் அலுவலகம் முன் அரசு மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.