காய்ச்சல் வந்தால் மெடிக்கலில் நீங்களாகவே மருந்து வாங்காதீர்கள்... சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தல்..!
டெங்கு காய்ச்சலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கொசுவை ஒழிப்பதில் மக்கள் கவனமாகவும் தீவிரமாகவும் செயல்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மருத்துவர்கள் சிறந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே டெங்கு காய்ச்சலைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. காய்ச்சல் வந்தாலே உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறும் தன்னிச்சையாக கடைகளில் மருந்துகளை வாங்கி சாப்பிட வேண்டாம் எனவும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சுத்தமான நீரில் கொசு உற்பத்தி ஆவதை தடுக்க மக்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். நீரை மூடி வைத்து பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே வாட்ஸ் ஆப்களில் பரவும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் யாரும் வாட்ஸ் ஆப்பில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.