Do not store where eriyavula skimmer Everything returns to the page skimmer resistant to shop

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மூடப்பட்ட சாராயக் கடைகளை இடமாற்றம் செய்யும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், தமிழக மக்களோ சாராயக் கடைகள் தங்கள் பகுதிக்குள் வேண்டாம் என்ற ஒற்றைக் கோரிக்கையை அரசிடம் வலுவாக தெரிவிக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரமுள்ள டாஸ்மாக் சாராயக் கடைகள் கடந்த மாதம் 31–ஆம் தேதி இரவோடு இரவாக மூடப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மூன்று சாராயக் கடைகளும், மாநில நெடுஞ்சாலையோரம் இருந்த 65 சாராயக் கடைகளும் மொத்தமாக மூடப்பட்டன. அவ்வாறு மூடப்பட்ட சாராயக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றிட உள்ளதாகவும், மக்களின் எதிர்ப்பு இல்லாத பகுதிகளில் சாராயக் கடைகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறை தீர்க்கும் கூட்டம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கிராமங்களில் புதிய சாராயக் கடைகளை திறக்க கூடாது என்று அழுத்தமாக கூறினர்.

கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனு:

“எங்கள் ஊரில் பள்ளிக்கூடம், மசூதி, குடியிருப்பு உள்ள பகுதியில் யாருக்கும் தெரிவிக்காமல் கடந்த 1–ஆம் தேதி சாராயக் கடையை திறந்துள்ளனர். இதனால் எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் அச்சப்படுகிறார்கள்.

மேலும், சாராயக் கடைகளுக்கு வருபவர்கள் குடியிருப்பு பகுதியிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள். இது குறித்து கேட்டால் ஆபாசமாக பேசுகிறார்கள்.

கிராமங்களில் சாலைகளின் முன்பு வாகனங்களை நிறுத்திச் செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மக்களும் சிரமப்படுகிறார்கள். எனவே, உடனடியாக இந்த சாராயக் கடையை அகற்ற வேண்டும்” என்று அதில் கூறியுள்ளனர்.

அதேபோன்று, கிருஷ்ணகிரியை அடுத்த குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அளித்துள்ள மனு:

“எங்கள் கிராமத்தில் சாலையோரம் டாஸ்மாக் சாராயக் கடை திறக்க உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்காக கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் மூன்று பள்ளிகள் உள்ளன. அதனால் இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். மாணவிகளின் நலன்கருதி எங்கள் கிராமத்தில் மதுக்கடையை திறக்க கூடாது என கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இப்படி அனைத்து மக்களும் சாராயக் கடை எங்களுக்கு வேண்டாம் என்ற ஒற்றைக் கோரிக்கையை ஒற்றுமையாக தமிழகம் முழுவதும் வலியுறுத்தும்போது அதற்கு செவி சாய்ப்பதே மக்களாட்சியின் மாண்பு. பொறுத்திருந்து பார்ப்போம் மக்களின் கோரிக்கை நிறைவேறுகிறதா அல்லது போராட்டத்திற்கு வித்திடுகிறதா?