பெட்ரோலிய கிடங்கு அமைக்க கூடாது - விவசாய தொழிலாளர்கள் தருமபுரியில் ஆர்ப்பாட்டம்...
தருமபுரி
சிவாடியில் பெட்ரோலிய கிடங்கு அமைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பச்சாகவுண்டர், மாவட்டக்குழு உறுப்பினர் தீர்த்தகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன், ஒன்றிய செயலாளர் மாதையன், ஒன்றிய தலைவர் சொக்கன், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் ராமானுஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தர்மபுரி ஒன்றியம் முழுவதும் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
வேலை செய்தவர்களுக்கு சட்டப்படி வட்டியுடன் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும்.
ஆண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் ஊரக வேலை உறுதிதிட்ட பணி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
சட்ட விதிமுறைகளின்படி வேலை வழங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில், நிர்வாகிகள் ராஜி, மல்லையன், பாலகிருஷ்ணன், பழனியம்மாள், முனுசாமி, மகேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
"ஊரக வேலைஉறுதி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்.
சிவாடியில் பெட்ரோலிய கிடங்கு அமைக்கக் கூடாது.
நல்லம்பள்ளி வாரச்சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர்.