தவணை முறை ஓய்வூதியம் வேண்டாம்; முழுமையான ஓய்வூதியம் மட்டுமே வேண்டும்…
நாமக்கல்
ஓய்வூதியத்தை தவணை முறையில் வழங்குவதை நிறுத்திவிட்டு, மாதம்தோறும் 1-ஆம் தேதியன்றே முழுமையாக வழங்க வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் நலச் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ரவிசந்தர் தலைமை வகித்தார். அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலர் தாமோதரன், பொருளாளர் சுந்தரபிரகாசம் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினர்.
“ஓய்வூதியத்தை தவணை முறையில் வழங்குவதை நிறுத்தி மாதம்தோறும் 1-ஆம் தேதியன்றே முழுமையாக வழங்க வேண்டும்.
ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பண பலன்கள், வருங்கால வைப்பு நிதி, பணிக் கொடை, ஊதியம் உள்ளிட்ட அனைத்துத் தொகைகளையும் ஓய்வுபெறும் நாள் அன்றே வழங்க வேண்டும்.
அரசு அமைத்த ஓய்வூதிய சீரமைப்புக் குழுவின் பரிந்துரையின்படி அரசே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்.
போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும், செலவுக்கும் இடைப்பட்ட தொகையை, அரசே ஏற்க வேண்டும்.
போக்குவரத்து கழகங்களை நட்டத்திலிருந்து காப்பாற்ற ரூ.20 ஆயிரம் கோடி நிதியை வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின் ஊதிய உயர்வு வழங்குவதுபோல் போக்குவரத்து கழக ஊழியர், ஓய்வூதியர்களுக்கும் ஊதிய, ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும்” போன்ற தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.