Do not hand over the mail service to private - Conclusion at the All India Post Office Conference ...

விருதுநகர்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அஞ்சல் சேவையை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என விருதுநகரில் நடைபெற்ற அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட மற்றும் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மற்றும் சிவகாசி கிளைகளின் சார்பில் 37–வது கோட்டம் மற்றும் கிளை மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டிற்கு கோட்ட தலைவர் சுப்பையா தலைமைத் தாங்கினார். முன்னாள் மாநில நிர்வாகிகள் குருசாமி, சுந்தர்சிங், முருகேசன் ஆகியோர் முறையே தேசியக் கொடி, சம்மேளனக் கொடி, அஞ்சல் காரர் கொடி ஆகியவற்றை ஏற்றி வைத்தனர்.

கோட்ட செயலாளர் சோலையப்பன் செயல்பாட்டு அறிக்கையை சமர்பித்தார். மாநில செயலாளர் கண்ணன், மாநில பொருளாளர் வெங்கட்ரமணி, தென் மண்டல செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கோட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் வாழ்த்தி பேசினர். பின்னர் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கோட்ட தலைவராக சுப்பையாவும், செயலாளராக சோலையப்பனும், பொருளாளராக பாலசுப்பிரமணியனும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில், "இந்தியா முழுவதும் பெரிய நகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை அஞ்சல் துறை சேவைகள் ஒரு அங்குலம் கூட விலகாமல் நடைபெற்று வருகின்றது. இந்த சேவையை தனியார் வசம் ஒப்படைக்கும் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்.

ராஜபாளையம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டின் முடிவில் கோட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் நன்றித் தெரிவித்தார்.