Do not Engage in Watertown Drinking Water Supply - Kamal Haasan on Twitter
நிலவேம்பு குடிநீர் விநியோகத்தில் ஈடுபடாதிருக்க வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும், குணமாக்கவும் நிலவேம்பு குடிநீரை கடந்த சில வருடங்களாக தமிழக அரசு, மக்களுக்கு அளித்து வருகிறது.
இதில், சமூக அமைப்புகள், நடிகர்களின் ரசிகர் மன்றங்கள், அரசியல் கட்சிகள் போன்றோரும் மக்களுக்கு நிலவேம்பு குடிநீரை கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிலவேம்பு குடிநீரை குடித்தால் மலட்டுத்தன்மை வரும் என்று யாரோ சிலர் கொளுத்திபோட்டு விட்டனர். இது சமூக வளைதளங்களில் வேகமாக பரவியதால் நிலவேம்பு குடித்தவர், குடிக்காதவர் என அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது.
அதற்கு விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நிலவேம்பு குடிநீர் ஆரோக்கியமானதுதான். வதந்தியை நம்பாதீர் என்றும் நிலவேம்பு குடிநீர் குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் எச்சரித்தார்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நிலவேம்பு குடிநீர் விநியோகத்தில் ஈடுபடாதிருக்க வேண்டும்.
எனினும் டெங்கு ஒழிப்பதற்கான மற்ற பணிகள் தொடரட்டும்” என்று நற்பணி மன்றத்தினருக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டும் என்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்” என்று கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
