Do not emphasize that you should live in a working village - demonstration of village administrative officers ...
தஞ்சாவூர்
பணி செய்யும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை தளர்வு செய்ய வேண்டும் என்று தஞ்சாவூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் நல்லசிவம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்புச் செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் கிருபாகரன் வரவேற்றார்.
இதில் முன்னாள் மாநிலத் தலைவர் முருகேசன், முன்னாள் மாநிலச் செயலாளர் தம்பிதுரை, மாநிலச் செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "இணையதள செலவின தொகையை வழங்க வேண்டும்.
இடமாறுதல் கேட்டு மனு அளித்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனே மாறுதல் வழங்க வேண்டும்.
அம்மா திட்ட செலவின தொகையை வழங்க வேண்டும்.
உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு பழைய நடைமுறையை கடைபிடிக்கும் அரசாணையை வெளியிட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்யும் கிராமத்தில் குடியிருக்க வேண்டும் என்று வலியுறுத்துவதை தளர்வு செய்ய வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
21 மாத நிலுவை ஊதிய தொகையை வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன், முன்னாள் மாவட்டத் தலைவர் வைத்திலிங்கம், மாவட்டத் துணைத் தலைவர் மதிவாணன், இணைச் செயலாளர் அருண்குமார், பிரசார செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்டப் பொருளாளர் மாரிமுத்து நன்றித் தெரிவித்தார்.
