நீட் தேர்வை எதிர்த்து மதுரையில் நாளை நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் திடீரென ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் மதுரையில் நாளை நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆளுநர் ஆர்.என்.ரவி நீர் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிப்பதற்கு ஒருபோதும் கையெழுத்து போடமாட்டேன் எனச் சொன்னார். இதனால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் போன மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்துகொண்டார். தாயில்லாத மகனை இழந்த சோகத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்த இந்தச் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அதே சமயத்தில் மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தீன் நீட் தீர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலும் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டார். மாணவர் ஃபயாஸ்தின் நீட் தேர்வால் வசதியானவர்களுக்கே வாய்ப்பு கிடைப்பதாகவும் தன் நண்பனைப் போன்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் போகிறது என்றும் கூறி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

ஃபயாஸ்தீன் பேச்சை கவனிச்சீங்களா? திமுகவின் கல்லூரி வசூல் வேட்டையை விளாசும் அண்ணாமலை!

குறிப்பாக, மாணவர் ஜெகதீஸ்வரனின் இறுதிச் சடங்கிற்கு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடமும், திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று சொன்னீர்களே, என்ன செஞ்சீங்க என்று நறுக்கென்று கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தான் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலும், ரூ.25 லட்சம் செலுத்தி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பதாகவும் ஃபயாஸ்தின் கூறினார். 

இதன் எதிரொலியாக திமுக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி (நாளை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அமைச்சர் கீதாஜீவன் அறிவித்திருந்தார். ஆனால், நீட் தேர்வு விலக்கு அளிக்க மறுக்கும் மத்திய அரசுக்கும், தமிழக ஆளுநருக்கும் கண்டனம் தெரிவித்து திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி ஆகியவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என்ற தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வை எதிர்த்து மதுரையில் நாளை நடைபெற இருந்த உண்ணாவிரதப் போராட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குப் பதிலாக ஆகஸ்ட் 23ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

702 ஆண்டு சிறை... 234 பிரம்படி... 5 வருடமாக சொந்த மகள்களையே சீரழித்து வந்த தந்தை!