செங்கல்பட்டு மதுராந்தகம் ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மதுராந்தகம் ஒன்றிய பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா. இவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் செந்தில். இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். ரேணுகா – செந்தில் தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் ரேணுகா அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 15வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டார்.

அந்த தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார். அதன் பின்னர் அவர், திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில், அதிக வட்டிக்கு கடன் பெற்று தேர்தலில் போட்டியிட்டதாகவும் கடனை கொடுத்தவர்கள் வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த நிர்பந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை ரேணுகா தனது வீட்டு படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை கண்ட அவரது கணவர் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுக்குறித்து மதுராந்தகம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிபடையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் உயிரிழந்த ரேணுகாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குடும்ப பிரச்னை காரணமாக ரேணுகா தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
