Diwali sales of this year are priced at Rs.1 crores.

இராமநாதபுரம்

இந்த வருட தீபாவளி விற்பனை ரூ.1 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று இராமநாதபுரம் கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்தார்.

இராமநாதபுரம் கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் நேற்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் எஸ்.நடராஜன் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம், “தமிழக அரசு கைத்தறி இரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பண்டிகையை முன்னிட்டு பல வர்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டுச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறை ஆகியனவும் தீபாவளிக்காக கொண்டுவரப்பட்டு உள்ளன.

உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளன. பாரம்பரிய இரகங்களைப் புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கி சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்குடி சேலைகள் ஆகியனவும் பண்டிகைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன.

இவை தவிர லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள் ஆகியனவும் கண்ணைக் கவரும் வர்ணங்களில் விற்பனைக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செப்டம்பர் 15 முதல் வரும் 2018 பிப்ரவரி வரை இராமநாதபுரம் கோ.ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தங்கமழை பரிசுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு இள்ளது.
வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள துணி இரகங்களுக்கு ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அந்தக் கூப்பனில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகச்சிறந்த பதிலளிக்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இராமநாதபுரம் விற்பனை நிலையத்தின் கடந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.81.63 இலட்சமாகும். இந்த ஆண்டுக்கான விற்பனை குறியீடாக ரூ.1.03 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தரமான கைத்தறி ஆடை இரகங்களைப் பெற்று பயனடைவதன் மூலம் கைத்தறி நெசவாளர்களையும் ஊக்குவித்திட வாய்ப்பாக அமையும் என்றார்.

கோ.ஆப்டெக்ஸ் துணி விற்பனை நிறுவனத்தின் மண்டல மேலாளர் எம்.சண்முகசுந்தரம், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வி.ஜி.அய்யான், எம்.சுந்தரி, துணை மண்டல மேலாளர் பி.ஸ்டாலின், மேலாளர் எம்.பழனிச்சாமி உள்பட அரசு அலுவலர்கள், கோ.ஆப்.டெக்ஸ் பணியாளர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.