"வெளிநாட்டு மருந்தை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் வேண்டாம்" - மோடிக்கு சத்யராஜ் மகள் கடிதம்
வெளிநாட்டு மருந்தை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர், சென்னையில் உள்ள கிளினிக் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். அவரிடம், மருந்து பரிந்துரை செய்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் சந்தித்துள்ளனர்.
திவ்யாவைச் சந்தித்த அவர்கள், தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்குமாறு கூறியுள்ளன. மல்டி வைட்டமின் மற்றும் கொழுப்பு சத்தை குறைக்கும் மருந்துகளை அவர்கள் பரிந்துரைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் கொடுத்த மருந்தில் வைட்டமின் ஓவர் டோஸாக இருந்ததால் அவற்றை பரிந்துரைக்க முடியாது என்று திவ்யா சத்யராஜ் மறுத்துள்ளார்.
மருந்தை பரிந்துரைக்க மறுத்த திவ்யா சத்யராஜுக்கு, அவர்கள், லஞ்சம் வழங்க முன் வந்துள்ளனர். இதற்கும் திவ்யா மறுத்து கூறியுள்ளார். ஆனால், அந்த ஆணும் பெண்ணும், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், எதற்கும் அஞ்சாத திவ்யா சத்யராஜ், அவர்களை கிளினிக்கில் இருந்து வெளியேற்றி உள்ளார்.
மேலும், இந்த மருந்துகளை அருந்துபவர்களுக்கு பல்வேறு குறைபாடுகள் உண்டாக்கும். எனவே இந்த மருந்துகளை இந்தியாவில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் திவ்யா சத்தியராஜ் எழுதியுள்ளார்.