பொங்கல் விழாவில் தகராறு; முறுக்கு வியாபாரிக்கு கத்திக் குத்து - நால்வர் கைது...
திருச்சி
பொங்கல் விழாவின்போது நடைப்பெற்ற கலை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தகராறில் முறுக்கு வியாபாரி கத்தியால் குத்தப்பட்டார். இதுதொடர்பாக நால்வரை காவலாளர்கள் கைது செய்தனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம், துறையூரில் பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதேபோல துறையூரில் உள்ள முத்து நகரில் பொங்கல் விழா நடைபெற்றபோது அதேப் பகுதியில் வசித்து வரும் முறுக்கு வியாபாரி வினோத் (28) என்பவர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த விழாவின் கடைசி நாளான நேற்று குழந்தைகளின் நடன நிகழச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.
முத்து நகர் பக்கத்து தெருவில் வசிக்கும் சில இளைஞர்கள் நடன நிகழ்ச்சியின்போது கூச்சல் போட்டதால் அவர்களை விழாகுழுவினர் கண்டித்துள்ளனர். ஆனால், அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் கூச்சல் போட்டுள்ளனர். அப்போது, அவர்களை வினோத் கண்டித்துள்ளார். இதில் வினோத்துக்கும், இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அந்த இளைஞர்களில் பெரியசாமி (19) என்பவர் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து வினோத்தை சரமாரியாக குத்தினார். இதில், வினோத்துக்கு தோல் பட்டை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து வினோத் கொடுத்த புகாரின் பேரில் துறையூர் காவலாளார்கள் வழக்கு பதிந்து பெரியசாமி மற்றும் அவரது நண்பர்கள் துறையூரைச் சேர்ந்த சபரிநாதன் (23), ஜீவா (19), விஜய் (19) ஆகியோரை கைது செய்தனர்.