கலங்கிய நிலையில் துர்நாற்றம் வீசும் குடிநீர் விநியோகம்; மக்கள் கடும் அவதி; தண்ணீரின்றி தவிப்பு...
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள காயல்பட்டினத்தில் கலங்கிய நிலையில் துர்நாற்றம் வீசும் குடிநீரை விநியோகம் செய்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் ரூ.29 கோடியே 68 இலட்சம் செலவில் 2-வது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக திருவைகுண்டம் பொன்னங்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உறைகிணறுகள் அமைத்து, அங்கிருந்து காயல்பட்டினத்துக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், காயல்பட்டினத்தில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் கலங்கிய நிலையில் மஞ்சள் நிறத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. அந்த தண்ணீரை குடிக்க முடியாத அளவுக்கு அதில் துர்நாற்றமும் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து நகரசபை சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன், நகரசபை என்ஜினீயர் சுரேஷ் ஆகியோர், "தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள உறைகிணறுகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் கலங்கலாக உள்ளது. இதனை விரைவில் சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
ஆனால் மக்கள் தரப்போ, "சரி செய்யும் வரை இந்த கலங்கலான நீரை குடிக்க முடியுமா? சமைப்பதற்கு பயன்படுத்த முடியுமா? இந்த நீரை கொண்டு குளிக்க கூட முடியாது. அவ்வளவு துர்நாற்றம் வீசுகிறது. 29 கோடி செலவு செய்தது இந்த கலங்கனான துர்நாற்ற நீரை விநியோகம் செய்வதற்கு தானா? என்றும் இந்த பிரச்சனையை சரிசெய்யும் வரை குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டனர்.