பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை - வரும் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்…
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணை நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை வரும் 16 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன.
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலைக்கு எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றம் செய்து வந்தன.
இந்நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்ப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகர் ஆகிய 5 நகரங்களில் சோதனை முயற்சியாக பெட்ரோல்-டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த 5 நகரங்களிலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகிய 3 எண்ணை நிறுவனங்கள் தினமும் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இந்த 5 நகரங்கள் தவிர மற்ற இடங்களில் பெட்ரோல்- டீசல் விலையை மாதத்திற்கு 2 முறை எண்ணை நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
இந்த நிலையில் பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை நாடு முழுவதும் வரும் 16-ந்தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.