dengue death increase

தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிகத்தீவிரமாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு பாதிப்பால் தினமும் உயிரிழப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

டெங்குவைத் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் டெங்குவிற்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் டெங்குவிற்கு இதுவரை 35 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெங்கு மற்றும் மற்றும் மற்ற காய்ச்சல்களால் இதுவரை 50 பேரு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது டெங்குவிற்கு 35 பேரும் டெங்கு அல்லாத காய்ச்சலுக்கு 15 பேரும் பலியாகியுள்ளனர் என சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, சேலம், பரமக்குடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பேர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் படுதீவிரமாக பரவிவரும் டெங்குவிற்கு கடந்த 3 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக 10 பேர் உயிரிழந்துவரும் நிலையில், டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதிலேயே அரசு குறியாக உள்ளது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவர்களில் கடந்த மூன்று நாட்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த மருத்துவமனையில் டெங்குவிற்கு சிகிச்சை அளிப்பதில் என்ன பிரச்னை என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதை விடுத்து விரைவில் டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.