பயமுறுத்தும் டெங்கு !! தமிழகம் முழுவதும் இன்று இதுவரை 7 பேர் பலியானதால் அதிர்ச்சி !!!
தமிழகத்தில் இன்று காலையில் இருந்து இதுவரை 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 10 க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 15 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தனர்.
ஆனால் தமிழக அரசு, இது வரை டெங்குவுக்கு 40 பேர் பலியாகியுள்ளதாகவும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய 5 பேர் அடங்கிய மத்திய குழு ஒன்று தமிழகத்தில் நேற்று முதல் ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும், இன்று ஒரே நாளில் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த நல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி என்பரின் மகன் ஹரினிஷ் .
தனியார் பள்ளி ஒன்றில் 11 ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் டெங்குவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஹரினிஷ், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவடடம் அறந்தாங்கியை சேர்ந்த 5 வயது சிறுமி பைரவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கூட்டுரைச் சேர்ந்த 5 வயது சிறுவன், வினோத்குமார், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் காயத்ரி சேலம் மாவட்டம் ஆலமரத்துக்காரன்பட்டியைச் சேர்ந்த சிறுவன் நந்தகுமார் ஆகியோருர் டெங்கு காய்ச்சல் காரணமாக இன்று உயிரிழந்துள்ளனர்.
இதே போன்று சேலம் அருகே ஓரத்தூரைச் சேர்ந்த விவசாயி சிவகுமாரும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கபிலன் ஆகியோர் என இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.