மின்தடையை சரிசெய்ய காலதாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை தாக்கிய நிலையில் பணி பாதுகாப்பு கோரி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.  

திருநெல்வேலி பாளையங்கோட்டை ராஜா குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது உடனே அப்பகுதி மக்கள் பாளையங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாகியும் மின்வாரிய ஊழியர்கள் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு 11.40 மணியளவில் மின்வாரிய ஊழியர்கள் முத்துகிருஷ்ணன் மற்றும் முத்துப்பாண்டியன் ஆகிய இருவரும் மின்தடையை சரி செய்ய அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே அப்பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் மற்றும் பலர் இணைந்து மின்வாரிய ஊழியர்களை தாக்கியுள்ளனர். இதில் முத்துக்கிருஷ்ணனுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:மதுரைக்கு டைடல் பார்க் தேவையில்லை.. முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சொன்ன புது காரணம்.!!

இது தொடர்பான தகவல் மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மின்வாரிய ஊழியர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இருவருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடைய மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமாதானபுரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க:EPFO வேலைவாய்ப்பு 2022 .. 40 காலி பணியிடங்கள்.. ரூ.34,000 சம்பளத்தில் வேலை.. விவரம் உள்ளே..

உயர் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு மின்வாரிய ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். போதுமான ஊழியர்கள் பணியில் இல்லாததே மின்தடையை உடனடியாக சரி செய்ய முடியாததற்கு காரணம் என வாரிய ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மின்தடையை சரி செய்ய காலதாமதம் ஏற்பட்டாலும் அதற்காக ஊழியர்களை தாக்குவது சரியான அணுகுமுறை அல்ல. எனினும் அரசு உடனடியாக தலையிட்டு மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது