ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிமை கோரிய தீபா, தீபக் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களுக்கு உரிமை கோரி அவரது வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சராக 1991 முதல் 1996 வரை இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் முன்னரே ஜெயலலிதா காலமாகி விட்டார். 

பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி: பயணத்திட்டம் இதுதான்!

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கில், இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோரை ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து போயஸ் கார்டன் இல்ல சொத்துகள் தீபக், தீபாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை பதிவு செய்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, ஜெயலலிதாவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தது. தொடர்ந்து, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்களை ஏலம் விடக் கோரி சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட, கிரண் ஜவாலி என்ற அரசு வழக்கறிஞரையும் நீதிமன்றம் நியமித்தது.

இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் சார்பில், ஜெயலலிதாவின் சொத்துக்களை, அவரது வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், அவர்களது மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.