புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் - தேவேந்திரர் நலக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்...
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேவேந்திரர் நலக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் கடை வீதியில் தேவேந்திரர் நலக் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் தனிஸ்லாஸ் தலைமை வகித்தார். தொகுதி கூட்டமைப்பு தலைவர் உலகராஜ் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சாலைவசதி செய்து தரவேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், இணைச் செயலாளர் அறந்தாங்கி மன்னர்மன்னன், கொள்கைபரப்பு செயலாளர் முல்லைவேந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.