Decision to hold special meetings to raise awareness about plastic rice - Food Safety Officer
மதுரை
பிளாஸ்டிக் அரிசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்புக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று உணவுப் பாதுகாப்பு அலுவலர் சரணவன் கூறினார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து பிளாஸ்டிக் அரிசி விவகாரம் பூதாகரமாகி தமிழகத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் அரிசிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டார்.
அதன்படி, மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் இலட்சுமிநாராயணன் ஆலோசனையின் பேரில் அனுப்பானடி, சிந்தாமணி, பனையூர், கீழவாசல், கே.கே.நகர், காமராஜர் சாலை, சிம்மக்கல் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் சரணவன் கூறியது, “மதுரையில் உள்ள அரிசி ஆலைகள், அரிசி கிடங்குகள், மொத்த விற்பனை நிலையங்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட 50–க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பிளாஸ்டிக் அரிசியினால் ஏற்படும் தீமைகள் குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அனைத்து வணிகர்களும், அரிசி ஆலை உரிமையாளர்களும் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.
மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்புக் கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
