தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க டிசம்பர் 31 வரை கெடு...!!! - உயர்நீதிமன்றம் அதிரடி!!
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை கெடு விதித்து மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014 ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடங்களை தேர்வு செய்யுங்கள் என தமிழக அரசை, மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அதன்படி மதுரை தோப்பூர், தஞ்சாவூர் செங்கிப்பட்டி உள்பட 5 இடங்களை தேர்வு செய்து தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதையடுத்து அந்த இடங்களை மத்திய குழு நேரில் ஆய்வு செய்தது.
ஆனால் இதுவரை தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதைதொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக துணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், இடத்தை ஆய்வு செய்து முடிவு செய்வதற்கு கூடுதல் அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும் என கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.