மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால், விரக்தியடைந்த பெற்றோர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுக்கு உடந்தையாக இருந்த மகன், கொள்ளி வைக்க கூடாது என கடிதம் எழுதி வைத்ததால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, மண்டகாபாளையம் கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி சுகுணசெல்வம்(50). இவரது மனைவி மீனாட்சி(47). இவர்களது மகள் சுபஸ்ரீ (23). திருச்செங்கோட்டில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

சுபஸ்ரீயும், திருச்செங்கோடு எஸ்என்டி ரோட்டில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனபால்(23) என்பவரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்கு சுபஸ்ரீயின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய வரன் பார்த்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறிய சுபஸ்ரீ, சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள ஒரு கோயிலில், தனபாலை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இதுகுறித்து தனது தம்பி சூர்யாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

இதையறிந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். ஆனாலும், மகள் தங்களது பேச்சை கேட்காமல் திருமணம் செய்துகொண்டதால், விரக்தியடைந்த சுகுணசெல்வம் – மீனாட்சி ஆகியோர், நேற்று மாலை வீட்டில் தூக்குப்போட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நீண்ட நேரமாக அவர்கள் வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர், சுகுணசெல்வம் வீட்டுக்கு சென்றனர். அங்கு கணவன், மனைவி இருவரும் தூக்கில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருச்செங்கோடு புறநகர் போலீசார்த, சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், அங்கு சோதனை செய்தபோது, அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. 

அதில், ``எங்கள் பேச்சை கேட்காமல் மகள் காதல் திருமணம் செய்து கொண்டது எங்களுக்கு பிடிக்கவில்லை. எனவே, தற்கொலை செய்து கொள்கிறோம்.

எங்கள் உடல்களை ஒன்றாக சேர்த்து புதைத்து விடுங்கள். எங்கள் சாவுக்கு துக்கம் விசாரிப்பதற்கு கூட எங்கள் மகள் வரக்கூடாது. காதலுக்கு துணையாக இருந்த மகன் சூரியாவும் எங்களுக்கு கொள்ளி வைக்கக்கூடாது’’ என எழுதியிருந்தனர்.

அக்கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். பின்னர், இருவரது உடல்களை மீட்டு இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் சுபஸ்ரீ, தனது காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு திருச்செங்கோடு டவுன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.