கடல் அரிப்பால் வீடுகள் சேதம்...கண்டும் காணாமல் இருக்கும் அரசு : குமுறும் பொதுமக்கள்
சென்னை: சென்னை பட்டினபாக்கத்தில் கடல் அரிப்பால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. இதனால் 1000-க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் குடியிருப்புகளை இழந்து சாலையிலேயே தஞ்சமடைந்துள்ளனர். சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள சீனிவாசபுரம் மீனவ கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடிசை மற்றும் கூரை வீடுகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சீனிவாசபுரம் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. இதனால் கடல் அரிப்பு ஏற்பட்டு சுமார் 300 வீடுகள் இடிந்துள்ளன. மீனவர்களின் உடைமைகள், வலை உள்ளிட்ட மீன்பீடி சாதனங்கள் சேதமடைந்தன. இதனால் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய 1000-த்திற்கும் மேற்பட்டோர் சாலைகளிலேயே தஞ்சமடைந்தனர்.
அரசு அதிகாரிகளிடம் உதவி கோர முயன்ற போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இருப்பிடத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மீன குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.