Dalit people demanding to place the permanent place in the graveyard to buried the bodies ...

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் இடுகாட்டில் உடல்களைப் புதைக்க நிரந்தர இடம் வேண்டும் என்று கோட்டாட்சியரிடம் தலித் மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கொடநகர் காலனி பகுதியில் உள்ள சுமார் 300 வீடுகளில் 1000-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் யாராவது இறந்தால், இறந்தவரின் சடலத்தை செய்யாறு ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டுப் பகுதியில் புதைப்பது வழக்கம்.

இந்த நிலையில், இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதுடன், அந்தப் பகுதியில் உள்ள ஆற்று மணலை கடத்தியும் வருகின்றனர்.மேலும், இடுகாட்டுப் பகுதியில் இருந்த அரிச்சந்திரன் சிலையையும், சில சமாதிகளையும் மணல் கடத்தல்காரர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, கொடநகர் காலனி பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியர் ராஜேந்திரன் கடந்த திங்கள்கிழமை இரவு உயிரிழந்த நிலையில், அவரது உடலைக் கொண்டுச் செல்ல வழியில்லாததாலும், அடக்கம் செய்ய இடம் இல்லாததாலும் அவரது உறவினர்களும், இந்தப் பகுதி மக்களும் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, வருவாய் துறையினர், காவலாளர்கள் அவர்களை சமாதானப்படுத்தி இடுகாட்டுக்கு நிரந்தர இடம் ஒதுக்கித் தருவதாக உறுதி அளித்ததனர். அதனால், தலித் மக்கள் சாலை மறியலை கைவிட்டு ராஜேந்திரன் உடலை அடக்கம் செய்வதில் மும்முரமாகினர்.

இந்த நிலையில், செய்யாறு இடுகாட்டில் சடலங்களை புதைக்க நிரந்தர இடம் வேண்டி கொடநகர் காலனி பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் செய்யாறு கோட்டாட்சியர் பொன்.கிருபானந்தத்திடம் நேற்று மனு ஒன்றை அளித்தனர்.

அதில், "இடுகாட்டுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இடுகாட்டுக்குச் செல்வதற்கான பாதையை சீரமைக்க வேண்டும்.

இடுகாட்டுப் பகுதியில் கை பம்புடன் காரிய மேடை அமைத்துத் தர வேண்டும்.

சேதமடைந்த அரிச்சந்திரன் சிலையை புதிதாக அமைத்துத் தர வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

அந்த மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், நாளை (அதாவது இன்று) நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

அதனையேற்றுக்கொண்ட அந்தப் பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.