ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம் – வர்தா புயலின் கோர தாண்டவத்தில் 2 ஏக்கர் வாழை மரம் நாசம்
வர்தா புயலின் கோர தாண்டவத்தால், 2 ஏக்கர் வாழை மரங்கள் அழிந்து நாசமானது. புளியம் மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்து விழுந்தன. இச்சம்பவத்தால், ஸ்ரீபெரும்புதூர் அருகே பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சியில் மணிமங்கலம், அண்ணா நகர், காந்திநகர், பாரதி நகர், இந்திரா நகர், பெரிய காலனி ஆகிய பகுதிகளில் 8000க்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் விவசாய தொழிலை நம்பி வாழ்கின்றனர்.
வர்தா புயலின் கோர தாண்டவத்தால், மணிமங்கலம் - கரசங்கால் சாலை, மணிமங்கலம் - ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சாலைகளில் 100 ஆண்டு பழமையான 20க்கு மேற்பட்ட புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மணிமங்கலம் கிழக்கு மாடவீதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் பயிரிடப்படிருந்த்து. வர்தா புயலின் கோர தாண்டவத்தால், வீசிய பயங்கர காற்றில் வாழைமரங்கள் முற்றிலும் சேதமாகியுள்ளது. மேலும் இதே தெருவில் 5 வீடுகள் மீது மரங்கள் விழுந்ததில் வீடுகள் இடிந்து விழுந்தன.
மின்சார கம்பி அறுந்து விழுந்தது. நெடுஞ்சாலை துறை, ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் சாலையில் விழுந்துள்ள மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.