வடலூரில் நடைபெற்ற காங்கிரஸ் கிராம கமிட்டி கூட்டத்தில் பங்கேற்க வந்த எம்.பி. விஷ்ணு பிரசாத் உள்பட 6 பேர் லிப்டில் சிக்கினர்.

கடலூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமியின் மகன். இந்நிலையில் கடலூர் மாவட்டம் வடலூரில் இன்று காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி. விஷ்ணு பிரசாத் தனியார் விடுதிக்கு வந்திருந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல்! ரூ.48,000 உதவித்தொகை! அள்ளிக்கும் கொடுக்கும் மத்திய அரசு!

கிராம கமிட்டி கூட்டம் நடைபெறும் 2வது தளத்துக்கு செல்வதற்காக எம்.பி. விஷ்ணு பிரசாத் உள்பட 6 நிர்வாகிகள் லிப்ட்டில் சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் பாதி வழியில் பழுதாகி நின்றது. இதனால் விடுதி ஊழியர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர். விடுதி ஊழியர்கள் அவசர கால சாவியை பயன்படுத்தி லிப்டை திறக்க முயற்சித்தனர். ஆனால் தோல்வியில் முடிந்தது. 

இதையடுத்து உடனடியாக குறிஞ்சிபாடி, நெய்வேலி, கடலூரில் உள்ளிட்ட தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் லிப்ட்டில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி லிப்ட்டை இயக்க முயற்சித்தும் முடியவில்லை. பின்னர் வேறு வழியில்லாமல் லிப்ட்டின் கதவை உடைத்து உள்ளே சிக்கிய விஷ்ணு பிரசாத் எம்.பி. உள்பட 6 பேரை ஒரு வழியாக மீட்டனர்.

இதையும் படிங்க: மத்திய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பதுங்குக்குழி பழனிசாமி எங்கே? செந்தில் பாலாஜி!

லிப்டில் மயங்கி விழுந்த நிலையில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் இரண்டு பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணையில் மூன்று பேர் மட்டுமே செல்லக்கூடிய லிப்டில் 6 பேர் சென்றதே லிப்ட் பழுதாகி நின்றதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.