விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுயானைகளால் பயிர்கள் நாசம்; அகழிகள் எதுக்குதான் இருக்கோ? விவசாயிகள் வேதனை...
தேனி
தேனி மாவட்டத்தின், தேவாரம் - கோம்பை பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகளால் பயிர்கள் நாசமாகியுள்ளன. காட்டுயானைகள் வராமல் இருக்க அகழிகள் வெட்டியும் பயனில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி காட்டுயானைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் நிலவும் பகுதி. குறிப்பாக அடர்ந்த வனப்பகுதியான தேவாரம் - கோம்பையில் உள்ள 18-ஆம் படி, சதுரங்கப்பாறை, சாக்குலூத்து, காப்புகாடு உள்ளிட்ட இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சுற்றித் திரிகின்றன.
இவை, மலை அடிவார பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அங்கு, 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு, கம்பு, தக்காளி, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்கின்றன.
சமீபகாலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே யானைகளை விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவில்லையாம்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள், "தேவாரம் முதல் கோம்பை வரை யானைகள் வருவதை தடுக்க மலை அடிவாரத்தை ஒட்டி சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு அகழிகள் வெட்டப்பட்டன. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.
ஏனெனில், மலை அடிவாரத்தில் உள்ள சில இடங்களில் பாறைகளை வெட்டி முழுமையாக அகழி அமைக்கவில்லை. காட்டுயானைகள் அதிகம் வாழும் தேவாரம் வனப்பகுதியில் நிரந்தரமாக நன்கு பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரிகளை பணி அமர்த்த வேண்டும்.
மேலும், விளை நிலங்களுக்குள் காட்டுயானைகள் வருவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.