crop insurance is must Prime Minister Modi advised to Salem Farmers

சேலம்

பயிர் காப்பீடு செய்வது மிக அவசியம் என்று காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி சேலம் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். 

பிரதமர் மோடி, நமோ செயலி மற்றும் காணொலி காட்சி மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதியில் உள்ள விவசாயிகளுடன் பேசி வருகிறார்.

அதன்படி, சேலம் மாவட்டம், வாழப்பாடி சி.எஸ்.சி. பொது சேவை மையத்தில் அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகளுடனும் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் முதலில் மோடி விவசாயிகளின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்னர் அவர் பேசினார். 

மோடி, விவசாயிகளிடம் பேசியது: "நாடு முழுவதிலும் உள்ள 600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. 

எங்கள் அரசு விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக்க அரசு உறுதி பூண்டுள்ளது.

வேளாண்மையில் மகத்தான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. முந்தைய அரசை விட முன்னேற்றத்தைக் கொண்டுவர நினைக்கிறோம். 

விவசாயம் சார்ந்த அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு கட்டத்திலும் விவசாயிகளுக்கு உதவி வருகிறோம். விதைப்பது முதல் விளைச்சலை சந்தைப்படுத்துவது வரை ஒவ்வொரு கட்டத்திலும் மத்திய அரசு உதவி வருகின்றது.

காய்கறிகள், பழங்களை உற்பத்தி செய்வதில் இந்தியா புதிய சாதனை படைத்து வருகிறது. எதிர்பாராமல் ஏற்படும் வறட்சி மற்றும் கடும் மழையினால் பயிர்கள் இழப்பை சமாளிக்க விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வது மிக அவசியம்" என்று பிரதமர் மோடி பேசினார்.