“பெண்களுக்கு சீரியல் பார்க்காததே பிரச்னையாம்…!!!” – தொடர் மின்வெட்டு எதிரொலி
தொடர் மின் தடையால், பெண்களுக்கு டிவியில் சீரியல் பார்க்காததே பெரிய பிரச்சனையாக இருப்பதாக கூறுகின்றனர்.
வங்க கடலில் உருவான ‘வார்தா’ புயல் கடந்த 12ம் தேதி சென்னையில் கரையை கடந்தது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மரங்கள், மின்கம்பங்கள் விழுந்து பலத்த சேதம் ஏற்பட்டது. இதுவரை பல இடங்களில் மரங்கள் அகற்றப்படவில்லை. மின் இணைப்பும் வீடுகளுக்கு கொடுக்கவில்லை. இதனால், பல்வேறு சிறிய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியூர்களில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு 11ம் தேதியே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னையில் மட்டும் 108 தீயணைப்பு மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் இருந்தன. இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 60 தீயணைப்பு மீட்புக் குழுவினரும் தங்கினர். இதில் ஒவ்வொரு குழுவிலும் 6 முதல் 7 தீயணைப்பு வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
புயல் பாதிப்புக்கு பிறகு வீடுகள், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக ஈடுபட்டனர். சாலைகளின் குறுக்கே விழுந்த மரங்களை உடனடியாக வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.
வீடுகள் மற்றும் கார்களின் மீது விழுந்த மரங்களையும் அகற்றி, அதில் சிக்கிக் கொண்டிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். நேற்று முன்தினம் வரை சென்னையில் 215 இடங்களில் முறிந்துகிடந்த மரங்களை வெட்டி தீயணைப்பு வீரர்கள் அகற்றினர். மொத்தம் 650 மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.
வர்தா புயல் பூங்காக்களையும் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக அண்ணாநகர் டவர் பூங்கா, பனகல் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா உள்பட பல பூங்காக்களும் புயலில் சின்னாபின்னமாகின.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் புயல் சூறைக்காற்றால், மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்துள்ளனர். இதுவரை பல பகுதிகளில் மின் இணைப்பு கொடுக்கவில்லை.
இந்நிலையில் காலையில் கணவன்மார்களை வேலைக்கு அனுப்பிவிட்டு, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, டிவியில் சீரியல் பார்த்து கொண்டிருந்த பெண்கள், இப்போது, மின்தடை ஏற்பட்டுள்ளதால், மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். எந்த சீரியலில், என்ன காட்சி போய்விட்டது. என்ன சம்பவம் நடந்தது என தெரியாமல் அங்கலாய்த்து கொண்டு இருக்கின்றனர். இதனால் மின்வாரிய அலுவலகத்துக்கு தொடர்ந்து போன் செய்தபடி இருக்கிறார்கள்.
“ஊர்ல என்னென்னமோ சம்பவங்கள் நடந்துகிட்டு இருக்கு. ஆனால், இந்த பெண்களுக்கு சீரியல் பார்க்காத்தே பெரிய பிரச்சனையாம்” என மின் வாரிய ஊழியர்கள் கூறுகின்றனர்.