contempt of court case against Pudukottai collector

மதுரை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய, புதுக்கோட்டை ஆட்சியர் மீது அவமதிப்பு நடவடிக்கை வழக்கு பதியப்பட்டு நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததது.

புதுக்கோட்டை பூதம்பூரைச் சேர்ந்த குமரேசன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “புதுக்கோட்டை நகராட்சியின் மையத்தில் அமைந்துள்ள நைனாரிக்குளம் பகுதியை மக்கள் சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். அதோடு நகராட்சியின் சார்பில் பொதுக் கழிப்பிடங்களும், நியாயவிலைக் கடையும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல, சின்ன வெங்கபாயன்குளம் பகுதியையும் சிலர் ஆக்கிரமித்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் நிலையுள்ளது. இதனால், சின்ன வெங்கபாயன்குளம் சுகாதாரக்கேடு அடைந்துள்ளது.

அதோடு, மழைக் காலங்களில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேபோல புதுக்கோட்டை பகுதியில் உள்ள பல்வேறு குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கை தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 2–ஆம் தேதி உத்தரவிட்டனர். ஆனால் இன்று வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டார். மேலும், அந்த விசாரணையை வருகிற 5–ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.