Contamination in milk - sudden information in investigation

பாலில் கலப்படம் இருக்கிறதா என்பதை அறிய மதுரையில் நடத்தப்பட்ட முகாமில் ஒரு மாதிரியில் கலப்படம் இருப்பது தெரியவந்துள்ளது.

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாகவும் இதனால் புற்று நோய் வரவும் வாய்ப்புள்ளதாகவும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.

மேலும் பால் புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பபட்டுள்ளதாகவும், அவை வந்த பிறகே முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ராஜேந்திர பாலாஜியின் இந்த குற்றசாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாலின் தன்மையை ஆய்வு செய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன் ஒருபகுதியாக மதுரையில் பால் சோதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்.

அப்போது 108 மாதிரிகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில் ஒரு மாதிரியில் மட்டும் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதை தொடர்ந்து கலப்படம் செய்யப்பட்டுள்ள பால் நிறுவனத்தை ஆய்வு செய்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது, இன்னும் சில நிறுவனகள் பாலில் கலப்படம் செய்து வருகின்றன எனவும் அவர்களும் சிக்குவார்கள் எனவும் தெரிவித்தார்.