தஞ்சாவூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மண்டல மாநாட்டில் கட்சிக்கொடியை தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநாவுக்கரசர் இன்று தஞ்சையில் நடக்கும் மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள தஞ்சாவூர் வந்தார். கட்சியின் மண்டல மாநாடு துவங்குவதற்கு முன்னர் கட்சிக்கொடியை அங்கிருந்த மாநாட்டு பந்தலில் ஏற்றினார். அப்போது கூடி நின்ற தொண்டர்கள் வந்தே மாதரம் என கோஷமிட்டனர். 

பூக்கள் தூவ கட்சிகொடியை திரு நாவுக்கரசர் ஏற்றினார். கொடியை ஏற்றியவுடன் சிலர் முணு முணுத்துள்ளனர். என்ன விஷயம் என்று கேட்டபோது கொடியில் ஆரஞ்சு வர்ணம் தானே மேலே வரணும் என்று கூறியுள்ளனர். அப்போதுதான் புரிந்தது கட்சிக்கொடி தலைகீழாக ஏற்றபட்டதென்று. 

தொண்டர்கள் மெதுவாக சென்று கட்சித்தலைவர் திருநாவுக்கரசரிடம் கூற அப்போதுதான் உறைத்துள்ளது. உடனடியாக அவருக்காக மீண்டும் கட்சி கொடி ஒழுங்காக கட்டப்பட்டு மீண்டும் வந்தே மாதரம் கோஷம் முழங்க திருநாவுக்கரசர் கொடி ஏற்றி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியை தலைகீழாக மாற்றி காட்டுகிறேன் என்று சபதம் எடுத்தாரோ என்னவோ, முதல்கட்டமாக தலைகீழாக கொடியை ஏற்றி சாதனை படைத்துள்ளார் என வந்திருந்தவர்கள் சிரித்தபடி கூறி சென்றனர்.