complaint on theatre owner due to high ticket price

மத்திய அரசு ஜிஎஸ்டிவரியை ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதற்கு வணிகர்கள், வியாபாரிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது, சென்னை பூக்கடை கிடங்கு தெருவில்உள்ள ஜவுளிக்கடைகள் 3 நாள் கடையடைப்பு போராட்டமும் நடத்தி வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையொட்டி திரையரங்கு உரிமையாளர்கள், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, டிக்கெட் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர், மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு வழக்குகளும், புகார்களும் செய்துள்ளேன். இதுபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

தற்போது மத்திய அரசு, வரும் ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி மசோதா அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. இதில், பொருட்களுக்கான எவ்வித விலை உயர்வும் ஏற்படாது என மத்திய அரசு கூறியுள்ளது.

அதே நேரத்தில் மூத்த நடிகர்கள், நடிக்கும் படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள், கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக கடந்த ஆண்டு வெளியான கபாலி படத்தின் டிக்கெட் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. இவை அனைத்து திரையரங்கு உரிமையாளர்களின் உத்தரவின்பேரில் நடந்தது.

திரையரங்குகளில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து அரசு அறிவித்துள்ளது. ஆனால், அதனை எந்த திரையங்கமும் பின்பற்றவில்லை. வரும் ஜூலை 1ம் தேதி வரவுள்ள ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தேவராஜை, NewsFast குழு தொடர்பு கொண்டு பேசியபோது, “சினிமா திரையங்குகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு ஏற்கனவே நிர்ணயித்துள்ளது. தற்போது நடைமுறையிலும் உள்ளது. ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி மசோதாவை காரணம் காட்டி, திரையரங்கு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளனர். இது தன்னிச்சையான செயல்பாடு.

திரையரங்குகளில் கட்டணம் அதிகம் வசூலிப்பதற்கு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிட்டு, அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதுபோல் எதையும் செய்யாமல், ஜூலை 1ம் தேதி முதல், திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது கண்டனத்துக்கு உரியது என்றார்.