“தூத்துக்குடியில் புற்றுநோயால் 2555 பேர் இறந்துள்ளனர்“ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நாடு முழுவதும் இறக்கின்றனர் என்று அலட்சியமாக பதிலளித்தார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் தா.பாண்டியன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செவ்வாய்க்கிழமை தூத்துக்குடிக்கு வந்தார்.

அப்போது அவரிடம், “புற்று நோயால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 2555 நபர்கள் இறந்துள்ளனர், என்று கூறு செய்தியாளகள் கருத்துக் கேட்டனர். அதற்கு, இந்தியா முழுவதும்தான் இறப்பு நடக்கிறது என்று அலட்சியமாக பேசிக் கோபப்பட்டார்.

மேலும், “ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் வெற்றி பெறும்” என்ற பொதுவான கருத்து கூறி தன்னுடைய அலட்சியத்தை மீண்டும் காட்டியுள்ளார்.

அப்போது அவர், “தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும், அமைதியான முறையில் தேர்தல் நடக்க காரணமாக இருந்த பொதுமக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆளுங்கட்சிதான் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் என்ற பொதுவான கருத்து மீண்டும் உறுதியாகியுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது சரியாக திட்டமிடாமல் எடுக்கப்பட்ட முடிவாகும். கருப்பு பணம் ஒழிப்பு என்பது நீண்ட போராட்டம். மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்களிடம் குழப்பதை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் தனியார் குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. அதற்கு நிரந்தரமாக தடைவிதித்து அறிவிக்க வேண்டும். இந்தியா முழுவதிலும் உள்ள நதிகளில் இருந்து இது போன்ற குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க தடை விதிக்க வேண்டும். காவிரி பிரச்சினையை பொறுத்தவரை மத்திய அரசு, அரசியல் கண்ணோட்டத்துடன் தான் செயல்படுகிறது. இந்த கண்ணோட்டத்தை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை வேதனை தரக்கூடியதாக உள்ளது. விவசாயிகள் தற்கொலைக்கு கடன் தொல்லையே முக்கிய காரணம். விவசாயிகள் தற்கொலையை மாநில அரசு நடுநிலையோடு விசாரிக்க வேண்டும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இருநாட்டு மீனவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பயன் இல்லை. இதுகுறித்து உடனடியாக இந்திய அரசும் இலங்கை அரசும் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு ஒப்பந்தம் போட வேண்டும். இதன் மூலம் மட்டுமே தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க முடியும்” என்று செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகு முத்துப்பாண்டியன், மாநகர செயலாளர் ஞானசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.