பேருந்து கட்டண உயர்வை கண்டித்து கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக போராட்டம்...
நாமக்கல்
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மூன்றாவது நாளாக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்த கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் மூன்றாவது நாளாக வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, "பேருந்து கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும்" முழக்கங்களை எழுப்பினர். மேலும் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.