மோட்டார் வாகங்கள் மோதியதில் கல்லூரி மாணவர் பலி; இருவர் பலத்த காயம்; ஒருவர் தப்பியோட்டம்...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவன் மீது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் பலமாக மோதியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இதில், இருவர் காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய மற்றொருவர் தப்பியோடிவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே பெருங்காசாவயலைச் சேர்ந்த ரவி மகன் கார்த்திகேயன் (19). இவர் அறந்தாங்கி அருகேயுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று மதியம் கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் பரமந்தூர் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிரே நானாகுடியைச் சேர்ந்த மூன்று ஒரே இருசக்கர வாகனத்தில் வந்து இவரது இரு சக்கர வாகனத்தின் மீது பலமாக மோதினர். இதில், கார்த்திகேயனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்றொரு வாகனத்தில் வந்த மூவரில் இருவர் பலத்த காயத்தோடு மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் மட்டும் காயமின்றி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் காவலாளர்கள் வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடியவர் குறித்தும், விபத்து குறித்தும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.