கல்லூரி வாசலில் மாணவி கத்தியால் குத்தி கொலை - கொலையாளியை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்...!
கே.கே. நகரில் கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். மாணவியை கொலை செய்த நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னை கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் அஸ்வினி என்ற மாணவி பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் அஸ்வினி கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடித்துவிட்டு சில மணி நேரத்திற்கு முன்பு கல்லூரி வாயிலின் வெளியே நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அஸ்வினியை ஒரு நபர் கத்தியால் குத்தினார். இதில் மாணவி ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடினார்.
இதைப்பார்த்த பொதுமக்கள் அஸ்வினியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மாணவியை கத்தியால் குத்திய நபரை அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்து பிடித்து அடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
இன்னும் எதற்காக மாணவி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.