இராஜபாளையம்
அரசுப் பேருந்தில் சென்று மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த வாகனத்தை மறித்து தங்களது கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரியதால் மக்கள் மனு அளித்தனர்.
இராஜபாளையம் அருகிலுள்ள கிறிஸ்துராஜபுரம் கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைப்பெற்றது. இதற்கு ஆட்சியர் சிவஞானம் தலைமை தாங்கினார்.
இந்த முகாமில் 258 பயானாளிகளுக்கு ரூ.3 இலட்சத்து 47 ஆயிரத்து 570 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அந்த கிராமத்தில் உள்ள பயனாளிகளின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆட்சியர் சிவஞானம் வழங்கினார்.
இந்த முகாமிற்கு ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் அரசு பேருந்தில் சென்றிருந்தனர். முகாம் முடிவடைந்ததும் அனைவரும் பேருந்தில் விருதுநகருக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.
கிருஸ்துராஜபுரம் விலக்கில் பேருந்து வந்தபோது தெற்கு மீனாட்சிபுரம் கிராம மக்கள் அதனை மறித்தனர்.
“தங்களது கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்பட வில்லை என்றும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது” என்றும், “தங்களது கிராமத்தை ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் ஆட்சியர் பேருந்தை விட்டு இறங்காததால் உள்ளே செல்ல சிலர் முயன்றனர். அவர்களை சுற்றி நின்றிருந்த காவலாளர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
பின்னர், ஆட்சியருடன் வந்திருந்த அதிகாரி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
“கோரிக்கைகளை மனுவாக கொடுத்தால், ஆட்சியர் நேரில் வந்து பார்வையிடுவார்” என்று தெரிவித்தார்.
அதிகாரியின் சமரசத்தை ஏற்ற கிராம மக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அதிகாரியிடம் கொடுத்தனர். பின்னர், பேருந்திற்கு வழிவிட்டு, மக்கள் வீடு திரும்பினர்.
