கலெக்டர் பி.ஏ. படுகொலை … கள்ளக் காதல் காரணமா ? மர்ம பெண்ணை ட்ரேஸ் பண்ணும் போலீஸ் !!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூபதி கண்ணன் என்பவர் மாம் நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கள்ளக் காதல் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ராஜா காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பூபதி கண்ணன். இவர் புதுக்கோட்டைமாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (வேளாண்மை) பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி அனுராதா திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பிளஸ்-1 வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் உள்ளார்.
பூபதி கண்ணன் நாள்தோறும் காலையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு சொந்த காரில் பணிக்கு சென்று வருவார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பூபதி கண்ணன் பணிக்கு சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி அனுராதா, கணவர் பூபதி கண்ணனின் செல்போனை தொடர்பு கொண்டார். ஆனால் ‘ரிங்‘ சென்ற நிலையில் அழைப்பை அவர் ஏற்கவில்லை.
இந்த நிலையில் திருச்சி அருகே மாத்தூர் பகுதியில் தஞ்சாவூர் செல்லும் அரை வட்ட சுற்றுச்சாலையின் காட்டுப்பகுதியில் மூவேந்தர் நகர் எனும் இடத்தில் நேற்று காலை 7 மணி அளவில் ஒரு கார் நிற்பதையும், அதன் அருகே ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதையும் அப்பகுதியினர் பார்த்தனர்..
இது குறித்து மாத்தூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.அப்போது பிணமாக கிடந்தவர் பூபதி கண்ணன் என அவரது அடையாள அட்டை மூலம் தெரியவந்தது.
பூபதி கண்ணனின் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மேலும் அவர் அணிந்திருந்த பேண்ட் பாதி கழற்றிய நிலையில் இருந்தது. காரின் டிரைவர் இருக்கை பக்க கதவு திறந்து கிடந்தது. காரில் டிபன் பாக்ஸ் கேரியர் திறந்தும், அதன் அருகே ஒரு பையும் இருந்தது.
இந்த கொலை குறித்து மாத்தூர் போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கொலையான பூபதி கண்ணனின் மனைவி அனுராதாவுக்கும் தகவல் தெரிவித்தனர். அனுராதா தனது உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். அங்கு கணவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை கண்டு அவர் கதறி அழுதார்.
பூபதி கண்ணன் அணிந்திருந்த மோதிரம் மற்றும் கைக்கெடிகாரம் அப்படியே இருந்தன. இதனால் நகை, பணத்திற்கு இல்லாமல் வேறு காரணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகின்றனர். அவரது செல்போனை ஆராயந்து பார்த்த போது அவர் ஒரு பெண்ணுடள் அடிக்கடி பேசியிருப்பது தெரிய வந்தது.
இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் பூபதி கண்ணனை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். அவரது உடலில் வெட்டுக்காயங்களை பார்த்த போது கொடூரமாக மர்மநபர்கள் வெறியுடன் வெட்டியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.