புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்த  3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது கோவை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ்குமார் என்பவர் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து இருப்பது தெரியவந்தது.

கோவையில் கஞ்சா சப்ளை செய்து கைதான ஆயுதப்படை காவலர் கணஷே்குமார் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கஞ்சா விற்பனை

தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது கோவை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வரும் கணேஷ்குமார் என்பவர் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்து இருப்பது தெரியவந்தது.

கைது

இதனைத் தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து கோவை வந்த தனிப்படை போலீசார், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள கணேஷ் குமாரின் வீட்டைச் சோதனையிட்டனர். அப்போது வீட்டில் இருந்து சிறிதளவு கஞ்சா மற்றும் சில பொருட்களை கைப்பற்றியதுடன் கணேஷ்குமாரை கைது செய்து புதுக்கோட்டை அழைத்துச் சென்றனர். 

பணியிடை நீக்கம்

இந்நிலையில், கணேஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இடைநீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.