கடலோர மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு செம மழை இருக்காம்...!
தமிழக கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒக்கி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்தது. ஒக்கி புயல் கோரத் தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டம் பலத்த சேதடைந்தது. கடலுக்கு சென்ற சுமார் ஆயிரம் மீனவர்களின் நிலை என்ன என்பது பற்றி தகவல் இன்னும் தெரியவில்லை என்று கன்னியாகுமரி
மாவட்ட மக்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கன்னியாகுமரி கடற்பகுதியில் புதிதாக வளிமண்டல மேலடுக்கு மண்டலம் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென்மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று முதல் இரண்டு நாக்ளுக்கு கனமழை பெய்யும் என்றும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டம் மயிலாடியில் 7 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்ட நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.