பெண் அலுவலரின் பென்ஷன் பணத்தை அபேஸ் செய்த கூட்டுறவு சங்க செயலர்; போலீஸ் விசாரணை...
சிவகங்கை
உடன் வேலை செய்த பெண்ணின் பென்ஷன் பணத்தை அவரை போலவே கையெழுத்து போட்டு திருடிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலர் மீது காவலாளர்கள் வழக்குப் பதிந்தனர்.
சிவகங்கை மாவட்டம், அண்ணாமலை நகரைச் சேர்ந்த பாக்கியம் (61) என்பவர் சிவகங்கை அருகேவுள்ள நடராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அலுவலராக வேலை செய்து வந்தார். இவர் சமீபத்தில்தான் ஓய்வுப் பெற்றார்.
இந்த நிலையில் இவருக்கு ஓய்வூதிய (பென்ஷன்) பணப்பலனாக ரூ.29 ஆயிரத்தி 705 கிடைக்க வேண்டியது. இந்த தொகையை இவரது கணக்கில் இருந்து யாரோ எடுத்துவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாக்கியம் இதுகுறித்து விசாரித்தார். அப்போது, அதே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலராக பணியாற்றிய இலக்குவன் என்பவர் தான் பாக்கியத்தின் பணத்தை எடுத்தார் என்று தெரிந்தது. மேலும், பாக்கியம் போலவே கையெழுத்து போட்டு ஓய்வூதியப் பணத்தை திருடியதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக பாக்கியம் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை மாவட்ட குற்றப் பிரிவு காவலாளர்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயலரான இலக்குவனை விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதியப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உடன் வேலை செய்த பெண் அலுவலரின் பென்ஷன் பணத்தை அவரை போலவே கையெழுத்து போட்டு திருடிய கூட்டுறவு சங்க செயலரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது.