நுங்கம்பாக்கத்தில் சட்டவிரோத கட்டுமானம் குறித்து புகார் அளித்தும் அதை அலட்சியம் செய்து மாநகராட்சி பக்கம் தள்ளிவிட்ட சி.எம்.டி.ஏ அதிகாரிகள் உயர்நீதிமன்றத்தில் வாங்கி கட்டிக்கொண்டனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யாமல், மற்ற துறையினர் மீது திணிப்பதை நிறுத்த வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் உள்ள சட்ட விரோத கட்டுமானத்தை தடுத்து நிறுத்த கோரி அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த 7 பேர் பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கும், சென்னை மாநகராட்சிக்கும் புகார் அளித்துள்ளனர்.

புகார் வழங்கி 8 மாதங்கள் ஆகியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், ஆர்.மகாதேவன் அடங்கிய முதல் அமர்விற்கு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது,இது பற்றி மாநகராட்சிக்கு நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதியிருப்பதாக சிஎம்டிஏ அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சி.எம்.டி.ஏ, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கடிதம் எழுதியுள்ளது. தங்கள் சுமையை மற்ற துறை அதிகாரிகள் மீது திணிக்கும் வழக்கத்தை நிறுத்தி கொள்ள வேண்டும் என கண்டித்த நீதிபதிகள்.

 சட்டவிரோத கட்டுமானத்தை 15 நாட்களுக்குள் ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வில் சட்டவிரோத கட்டமானம் என தெரியவந்ததால் இரண்டு மாதத்திற்குள் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்த உத்தரவின் நகலை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனர்.